தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் சேவையாற்றும் நபர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு பிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் நேற்று (16) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து 100 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெஹிவளை, கடுவான பகுதியை சேர்ந்த 34 வயதுடைய கசுன் ஷெஹான் எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் 100 கிராம் ஹெரோயினுடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை, களுபோவில பகுதியை சேர்ந்த 41 வயதுடைய நாலக புஷ்பகுமார எனும் மிருகக்காட்சி சாலை ஊழியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மிருகக்காட்சி சாலையில் உள்ள அலுமாரியில் இருந்து 400 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த நபர்கள் மிருகக்காட்சி சாலையினுள் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பின்னர் குறித்த இருவரிடமும் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் கட்டுபெத்த பகுதியில் வைத்து அதிசொகுசு வாகனம் ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த வாகனத்தில் இருவர் இருந்துள்ளதுடன் குறித்த வாகனத்தின் ஓட்டுனரான மொரட்டுவ பகுதியை சேர்ந்த பாலித ரணதிஸ்ஸ எனும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த நபரிடம் இருந்து 68 கிராம் ஹெரோயின் மற்றும் 20 இலட்சம் ரூபாவிற்கு அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த வாகனத்தில் பயணித்த அம்பலாந்தொட்ட பகுதியை சேர்ந்த 34 வயதுடைய சம்சுதீன் மொஹமட் ஜுனைதீன் எனும் நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்த 15 கிராம் ஹெரோயின், துப்பாக்கி ஒன்று, மெகசின் ஒன்று மற்றும் 9mm தோட்டாக்கள் 5 உம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்படட நபர்களிடம் இருந்து மொத்தமாக 683 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த மோட்டார் வாகனம் சந்தேக நபர்களில் வாடகைக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெலிகட சிறைச்சாலையில் உள்ள சந்தேக நபர் ஒருவரினால் இவ்வாறு ஹெரோயின் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.