வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், அந்த மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை சரியாக பயன்படுத்தாமல் மீள திருப்பி கொடுத்து விட்டாரென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, நேற்று (சனிக்கிழமை) அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டார்.
இதன்போது 13வது அரசியல் சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உங்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறாரே என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “13 ஆவது அரசியல் சட்ட திருத்தம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
இதில் உண்மை என்னவென்றால், அந்த சட்டத்தை மாகாணசபை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
உதாரணமாக கூற வேண்டுமாயின், வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன், அந்த மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவழிக்காமல் திருப்பிக் கொடுத்துவிட்டார்.
இதேவேளை எனது இந்த டெல்லி பயணம் சிறப்பு வாய்ந்ததாகும். கடந்த நவம்பர் மாதத்தில் இலங்கை ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷ சந்திப்பின்போது 2 நாடுகளுக்கும் இடையே உள்ள நல்லுறவுக்காக போடப்பட்ட அஸ்தி வாரம். இதனூடாக மேலும் வலுவடைந்துள்ளது.
அத்துடன் பிரதமர் மோடி உடனான சந்திப்பு, மிகவும் பயன்மிக்க சந்திப்பாக அமைந்தது.இரு நாடுகளுக்கு இடையே இருந்த வேற்றுமைகள் களையப்பட்டு விட்டன.
நல்ல புரிந்துணர்வு மற்றும் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயுள்ள கூட்டுறவு, பிராந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதிலும் இரு நாடுகளும் நல்ல பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன” என குறிப்பிட்டுள்ளார்.