எதிர்கால தலைமுறை பெருமைப்படக்கூடிய வகையில் நாட்டை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஆனந்தா கல்லூரியின் சத் மஹல் கட்டடத்தை மாணவர்களிடம் கையளிப்பதை முன்னிட்டு கல்லூரியில் இருந்து உருவான முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை வரவேற்கும் வகையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பௌத்த தத்துவத்தின் அடிப்படையில் கல்லூரியில் கிடைத்த தேசிய உணர்வு, தாய் நாட்டை நேசிக்கின்றவர்களை உருவாக்குவதற்கு உதவியதாக குறிப்பிட்டார்.
மேலும் ஆனந்தா கல்லூரி, எப்போதும் நாட்டை நேசிக்குமாறு மாணவர்களுக்கு போதித்த, பரம்பரை பரம்பரையாக தேசப்பற்றுள்ளவர்களை உருவாக்கிய பாடசாலை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்துடன், தேசத்தின் தற்போதைய தலைவர் என்ற வகையில் நாட்டை சிறப்பாக முன்கொண்டு செல்வதற்கு ஆனந்தா கல்லூரியிடமிருந்து பெற்ற பலம் பெரும் உதவியாக அமைந்திருந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அந்தவகையில் எதிர்கால தலைமுறை பெருமைப்படக்கூடிய நாட்டை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தனக்கு தெளிவான நோக்கு உள்ளது என்றும் அதனை தான் கொள்கை பிரகடனத்தின் மூலம் மக்களுக்கு முன்வைத்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.
இந்த நிகழ்வில், அயோமா ராஜபக்ஷ அம்மையார், சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.