‘பாரிய கூட்டணி அமைத்துக்கொண்டு ஸ்தீரமான நாடொன்றை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும். அதற்காகவே ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளேன்’ என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான விஜித் விஜயமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சியிலிருந்து ஆளும் கட்சிக்கு மாறிய விஜித் விஜயமுனி சொய்ஸா, தனது நிலைப்பாடு தொடர்பாக உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “எமது கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுடனும் கட்சி போசகர் மஹிந்த ராஜபக்ஷவுடனும் இணைந்து செயப்படுவதில் எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால் மஹிந்த ராஜபக்ஷ் தற்போது வேறு கட்சி ஒன்றில் உறுப்புரிமை பெற்றுக்கொண்டுள்ளதாக பத்திரிகைகளின் மூலம் அறிந்துகொண்டேன். என்றாலும் மஹிந்த ராஜபக்ஷவை சுற்றியுள்ள ஓநாய்களுடனும் நாய்களுடனும் இந்த பயணத்தை தொடரமுடியாது. சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் அநாதரவாக உள்ளனர். அவர்களை பாதுகாக்க வேண்டும்.” என்றுள்ளார்.