மரண தண்டனையை நிறைவேற்றுவதன் மூலம் போதைப்பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்த முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடுமையான தண்டனைகளை நிறைவேற்றும் நாடுகளில் கூட குற்றங்கள் குறைந்ததாக இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ரயில்வே ஊழியர்களின் போராட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருக்கின்றார். மரண தண்டனை வழங்குவதற்கு நாங்கள் ஒருபோதும் இணக்கம் தெரிவிக்க மாட்டோம்.
1976இற்குப் பின்னர் இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இதுபோன்ற தண்டனைகள் ஷரி-ஆ சட்டத்தின் பிரகாரம் அரபு நாடுகளில் வழங்கப்படுகின்றன. ஆனால் அந்த நாடுகளில் குற்றங்கள் குறைந்ததாக இல்லை. அதனால் மரண தண்டனையை நிறைவேற்றி ஜனாதிபதியும் ஷரி-ஆ சட்டத்தையே அமுல்படுத்த முயற்சிக்கின்றார்.
இவ்வாறான சட்டங்களை நிறைவேற்றும் உலகில் எந்த நாட்டிலும் குற்றங்கள் குறைந்ததில்லை. அதனால் மரண தண்டனை நிறைவேற்றுவதால் எமது நாட்டில் போதைப்பொருள் விற்பனை குறைவடையும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.
இதேவேளை, அவரசரகாலச் சட்டம் பயங்கரவாத தாக்குதலைவிட பயங்கரமானதாகும். இதனால் இச்சட்டத்தை பயங்கரவாதத்துக்கு மாத்திரம் பயன்படுத்த வேண்டும். மாறாக தொழிற்சங்கங்களை அடக்குவத்கு பாவிக்கக் கூடாது. தற்போது ரயில் ஊழியர்களின் போராட்டம் இடம்பெறுகின்றது. அவர்களின் கோரிக்கைக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுக்கொடுத்து பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும்” என அவர் தெரிவித்தார்.