முஸ்லிம் கிராமங்களில் இருக்கின்ற அபிவிருத்திகள் தமிழ் கிராமங்களில் இடம்பெறவில்லையெனவும் இப்படியான நிலமைகள் மாறவேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மன்னார் மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் நேற்று (18) மாலை மன்னார் நகர மண்டபத்தில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஷவை ஆதரித்து நடாத்தப்பட்ட நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அமைச்சர் றிஷாட் பதியுதீன் தனது சமூகத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்று செய்து கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்.
தங்களது சமூதாயத்திற்கு மாத்திரம் உதவிகளை வழங்குகின்ற சில சந்தர்ப்பங்களை நாங்கள் பார்க்கின்றோம். வேலை வாய்ப்புக்களை வழங்கினாலும் கூட அவர்களுடைய சமூதாயத்திற்கே வழங்குகின்றனர்.
பொது நோக்கு மண்டபங்களை அமைத்துக் கொடுத்தாலும் கூட அவர்களுடைய இனத்திற்கே வழங்கப்படுகின்றது. அவர்களுக்கு வாக்களிக்கின்றவர்களின் கிராமங்களுக்குச் செல்லுகின்ற போதும், ஏனைய கிராமங்களுக்குச் செல்லும் போதும் எங்களுக்கு பாரிய வித்தியாசம் தெரிகின்றது.
இந்த நிலைமையை நாம் மாற்றுவதங்கு நமக்கு இருக்கின்ற ஒரே வாய்ப்பு கோட்டபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வைப்பது தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை நாங்கள் தவர விடுவோமாக இருந்தால் வடமாகாணத்தில் இருக்கின்ற தமிழ், சிங்கள மக்களின் அபிவிருத்திகளை நாம் எந்த ஒரு காலத்திலும் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படும்.
நாம் முஸ்லிம் கிராமங்கள் அபிவிருத்தி அடைவதற்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால் அதே நேரத்தில் தமிழ் கிராமங்களும் அபிவிருத்தி அடைய வேண்டும்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது கட்டுப்பாட்டின் கீழ் மன்னாரை வைத்திருந்தார். நான் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்தேன்.
நாங்கள் அந்த இடைவெளி இருப்பதற்கு இடம் வைக்கவில்லை. தற்போது இருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இடைவெளியை வைத்துக் கொண்டு அரசியலை மேற்கொள்கின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.