இலங்கையில் மதுசார விலைகளில் முறையான விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படாமையினால், மக்கள் மத்தியில் மதுசாரத்தைக் கொள்வனவு செய்யும் வசதி அதிகரித்துள்ளதோடு, அதன் விளைவாக மதுப்பயன்பாடும் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் கவலை வெளியிட்டுள்ளது.
பணவீக்கம் மற்றும் தனிநபர் வருமான அதிகரிப்புக்கு ஏற்ப மதுசார வரி திருத்தப்படாமையே இந்த நிலைமைக்கு பிரதானக் காரணமாக அமைந்துள்ளதாகவும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த காலத் தரவுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் மதுசார உற்பத்தி பாரியளவில் அதிகரித்துள்ளதுடன், குறிப்பாக மதுசார வகைகளின் உற்பத்தி 17 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் மதுவரி 20 சதவீதத்தால் உயர்த்தப்பட்டபோது மது விற்பனை 8.3 மில்லியன் லீட்டர்களால் குறைந்த அதேவேளை, அரசாங்கத்தின் வருமானம் 11.6 பில்லியன் ரூபாவால் அதிகரித்திருந்தது. அதேபோல், 2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலும் வரி அதிகரிக்கப்பட்டமையால் விற்பனை குறைந்த போதிலும், வரி வருமானம் 42.15 பில்லியன் ரூபாவாக உயர்ந்திருந்தது.
இதன்மூலம் வரி அதிகரிப்பு என்பது மதுப்பயன்பாட்டைக் குறைப்பதோடு அரசாங்க வருமானத்தை உயர்த்தும் ஒரு கருவியாகவும் உள்ளது. மதுசாரம் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கும் வரி வருமானத்தை விட, மதுப்பயன்பாட்டினால் ஏற்படும் ஆரோக்கிய மற்றும் பொருளாதார பாதிப்புகளைச் சரிசெய்ய அரசாங்கம் செலவிடும் தொகை மிக அதிகமாக உள்ளமை கவலைக்குரிய விடயமாகும். புள்ளிவிபரங்களுக்கமைய, மதுவரி வருமானமாக 165.2 பில்லியன் ரூபா கிடைக்கும் நிலையில், அதன் பாதிப்புகளை நிவர்த்தி செய்ய 237 பில்லியன் ரூபா வரை செலவிட வேண்டியுள்ளது. எனவே, நாட்டின் பணவீக்கம் மற்றும் மக்களின் வருமான மாற்றங்களைக் கருத்திற்கொண்டு மதுசார வரியினை அரசாங்கம் அவ்வப்போது திருத்தியமைக்கப்படுவது அவசியம்.
மதுசார உற்பத்திகளுக்கான மறைமுக விலை குறைப்பு மற்றும் தள்ளுபடி வழங்கும் நடைமுறைகளைச் சட்டரீதியாகத் தடுப்பது அவசியம். உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல்களுக்கு அமைய, முறையான வரி மற்றும் விலைக் கொள்கையைப் பின்பற்றுவதன் மூலமே மதுப்பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி, நாட்டின் பொருளாதார மற்றும் சுகாதார நிலையைப் பாதுகாக்க முடியும் என அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

