ஜான்சி ராணியின் வரலாற்றுக் கதையில் உருவான ‘மணிகர்னிகா’ படத்தின் வசூல் 100 கோடியை தாண்டி உள்ளது. இதையடுத்து, இந்தப் படத்தில் ஜான்சி ராணியாக நடித்த நடிகை கங்கனா ரணாவத், சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறார்.
கங்கனா ரணாவத் ஜான்சி ராணியாக நடித்த ‘மணிகர்னிகா’ படம் திரைக்கு வந்து ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த படம் தயாரானபோதே, வரலாறை திரித்து எடுப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின. பின், இயக்குநர் கிரிசுடன் மோதல் ஏற்பட்டு, கங்கனா ரணாவத்தே சில காட்சிகளை இயக்கினார். இந்நிலையில், இந்த படத்தின் வசூல் 100 கோடி ரூபாயை தாண்டி உள்ளது. இது கங்கனா ரணாவத்துக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘மணிகர்னிகா’ படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சத்தில் தயாராகி வெளி வந்தது. இந்த படத்தின் தயாரிப்பின் போதே சர்ச்சைகளும் ஏற்பட்டன. அதையெல்லாம் மீறி, ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. எதிரான விமர்சனங்கள் பெரிதாக வரவில்லை. படம், ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இதனால் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளது. வசூலிலும் சாதனை நிகழ்த்தி இருப்பது இரட்டை மகிழ்வை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு கங்கனா கூறியிருக்கிறார்.