வரலாற்று சிறப்புமிக்க மடு திருத்தலத்தின் ஆவணித்திருவிழா நடைபெற்று வரும் நிலையில் நேற்று மெழுகுவர்த்தி பவனி சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா கடந்த 6 ஆம் திகதி மாலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து நவ நாள் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம் பெற்ற நவ நாள் திருப்பலியை தொடர்ந்து மடு திருத்தலத்தில் மெழுகு திரி பவனி இடம் பெற்றது.
குறித்த பவனியில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகை, குருக்கள், அருட்சகோதரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இன்று மாலை வேஸ்பர் ஆராதனையும், நாளை வியாழக்கிழமை காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதுகாப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் காணப்படுகின்ற போதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மடு திருத்தலத்திற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.