போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி வீட்டில் அதிரடி சோதனை: சிக்கியது 90 கோடி.. 100 கிலோ தங்கம்
தமிழகத்தின் 8 இடங்களில் வருமானவரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 90 கோடி ரூபாய் மதிப்புள்ள பணமும், 100 கிலோ தங்கம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் திகதி பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.
அதற்கு பதிலாக பழைய நோட்டுகளை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியிருந்தார்.
இதற்காக பொது மக்கள் பலரும் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் நீண்ட வரிசையில் நின்று பணங்களை மாற்றிச் செல்கின்றனர்.
இவ்வாறு ரூபாய் நோட்டு மாற்றிக்கொடுக்கப்பட்டதில் பல இடங்களில் முறைகேடு நடந்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு அவ்வப்போது புகார்கள் சென்றுள்ளன.
இதைத் தொடர்ந்து வருமான வரி துறையினர் இந்தியாவில் பல இடங்களில் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தமிழகத்தின் சென்னையில் உள்ள தேனாம் பேட்டை, அண்ணா நகர், தி.நகர் உள்பட 8 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து போயஸ் கார்டனுக்கு நெருக்கமான கான்டிராக்டர் சேகர் ரெட்டியின் உறவினரான சீனுவாச ரெட்டி ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சோதனையில் ரூ.90 கோடி ரூபாய் பணம் மற்றும் 100 கிலோ தங்கம் சிக்கியதாக கூறப்படுகிறது.
இதில் ரூ.70 கோடிக்கு புதிய ரூ.2,000 நோட்டுகளும் பிடிபட்டுள்ளன. மேலும் சேகர் ரெட்டியின் ஆடிட்டர் பிரேம் என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.