அதிமுகவின் தலைமைக்கு சசிகலா கோஷ்டி வந்தால்? மத்திய உளவுத்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்
அதிமுகவின் தலைமைக்கு சசிகலா கோஷ்டி வந்தால் அந்த கட்சி உடைவது உறுதி என்று மத்திய உளவுத்துறை வட்டாரங்கள் பரபரப்பு கருத்துக்களை தெரிவித்துள்ளன.
அதிமுகவின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்த ஜெயலலிதாவின் மறைவு அந்த கட்சியில் மட்டுமல்ல, தமிழக அரசியலிலும் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது.
ஜெயலலிதா தனது அரசியல் வாரிசு என்று யாரையும் கைகாட்டவில்லை. அதேசமயம் அதிமுக தலைமைப் பொறுப்புக்கு சசிகலா ஏற்றுக் கொள்ளப்படுவாரா அல்லது நிராகரிக்கப்படுவாரா என்ற விவாதமும் நடைபெறுகிறது.
மேலும், சசிகலா தலைமையை வலியுறுத்தும் ஒரு குழு, கட்சி நடவடிக்கைகளில் சசிகலா தலையீட்டை விரும்பாத மற்றொரு குழு என அதிமுகவில் பிளவு ஏற்படும் என்ற பேச்சு உள்ளது.
இந்நிலையில் அதிமுகவில் நடக்கும் ஒவ்வொரு அசைவையும் மத்திய உளவுத்துறை மிக மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது.
முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்ததை பயன்படுத்திக் கொண்டு சசிகலா ஆட்சியையும் கட்சியையும் ஒட்டுமொத்தமாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததை அதிமுக தொண்டர்களால் ஏற்க முடியவில்லை.
மேலும், தற்போதைய நிலையில் அடுத்த சில மாதங்கள் அதிமுகவின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும்.
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் நடவடிக்கைகள், கட்சி மற்றும் ஆட்சியில் தலையீடுகள் அதிகரிக்குமேயானால் நிச்சயமாக அதிமுக உடைவது உறுதி.
எனவே அதிமுக ஒன்றாக இருப்பதும் உடைவதும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் கைகளில்தான் உள்ளது என்று மத்திய உளவுத்துறை கருதுகிறது.