கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை எம்ஜிஆர்., கமல்ஹாசன் என பலரும் படமாக்க ஆசைப்பட்டனர். அதற்கான முயற்சிகளும் எடுத்த போதும் அது படமாக்கப்படவில்லை. தற்போது மணிரத்னம், 800 கோடி பட்ஜெட்டில் இரு பாகங்களாக எடுக்க உள்ளார். இதனை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
அமிதாப்பச்சன், விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, நயன்தாரா, ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, ஜெயராம் என பலரும் நடிக்கயிருப்பதாக கூறப்படும் நிலையில் விரைவில் நடிகர் நடிகையர் பட்டியலை அறிவிக்க உள்ளார் மணிரத்னம். இதற்கிடையே படத்திற்கான பாடலை கம்போஸ் செய்து முடித்துவிட்டனர்.
இந்தநிலையில், பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று லைகா நிறுவனம் தரப்பில் விசாரித்தபோது, தற்போது படத்திற்கான முன் பதிவு வேலைகள் நடந்து வருவதாகவும், டிசம்பரில் படப்பிடிப்பை துவங்க உள்ளனர் என்கிறார்கள். மேலும் இப்படத்திற்கு தேர்வாகும் நடிகர்கள் படப்பிடிப்பு முடியும் வரை வேறு படங்களில் நடிக்க கூடாது என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.