குற்றங்களை சுமந்தி, கோட்டாபய ராஜபக்ஷவை சிறையில் அடைத்தாலும் அவர்தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி வேட்பாளர் என்று எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்தார்.
நுகேகொடயில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். உதயகம்மன்பில மேலும் கூறியுள்ளதாவது,
“ஜனாதிபதித் தேர்தல் எப்போது என்ற குழப்பம் தற்போது ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ளது.
அரசமைப்பின் 30 இன் கீழ் 2 ஆம் சரத்திற்கு இணங்க, ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக வரையறுக்கப்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கொன்றின்போது, ஐவரடங்கிய நீதிபதிகள் குழாமொன்றினால் இதுதொடர்பில் தீர்ப்பொன்றும் வழங்கப்பட்டது.
அதாவது, ஜனாதிபதியின் பதவிக்காலம் அவர் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்ட தினத்திலிருந்து ஆரம்பிக்கப்படுவதாகக் கூறப்பட்டது.
அதற்கிணங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதியன்றே நிறைவடைகிறது.
எனவே, அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் திகதிக்கும், டிசம்பர் 9 ஆம் திகதிக்கும் இடையில் நடைபெற்றாக வேண்டும்.
அதேநேரம், அரசமைப்புக்கு இணங்க, 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 26 ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் அறிவித்தல் விடுத்தே ஆக வேண்டும்.
19 ஆவது திருத்தச்சட்டத்திற்கு 2015, மே மாதம் 15 ஆம் திகதியன்றே சபாநாயகர் கைச்சாத்திட்டார்.
அதற்கிணங்க பார்க்கும்போது ஜனாதிபதியின் பதவிக்காலம் 2015 மே மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகி, 2020 மே, 15 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது என்ற தர்க்கத்திற்கு இணங்கவே, உயர்நீதிமன்றில் தற்போது வழக்குத் தொடரப்பட்டவுள்ளது.
ஆனால், 19 ஆவது திருத்தச்சட்டம் கைச்சாத்திடப்பட்ட நாளில் இருந்துதான் ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆரம்பமாகின்றது என்று 19 ஆவது திருத்தச்சட்டத்தின் எந்தவொரு சரத்திலும் கூறப்படவில்லை என்பதை நான் இங்கு தெளிவாகக் கூறிக்கொள்கிறேன்.
எனவே, உரிய நேரத்தில் நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடைபெற்றே ஆகவேண்டும்.
எமது தரப்பில் கோட்டாபயராஜபக்ஷ தான் வேட்பாளர் என்பது உறுதியாகிவிட்டது.அவரும் அதற்கு ஆயத்தமாகிவிட்டார்.
அமெரிக்க குரியுரிமை விவகார பிரச்சினையும் முழுவதுமாக தீர்க்கப்பட்டு விட்டது.
அத்தோடு, அவருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளின் பிரகாரம் அவர் சிறைக்குச் சென்றாலும், அவர்தான் எமது ஜனாதிபதி வேட்பாளர் என்பதை நான் உறுதியுடன் கூறிக்கொள்கிறேன்.
உண்மையில், சிறைச்சாலையில் இருந்துக்கொண்டு வாக்குக் கேட்டால் இலகுவில் வெற்றியடையலாம்” என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.