மக்களுக்கு நில உறுதிப் பத்திரத்தை வழங்குவதை எவராலும் தடுக்க முடியாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் 10 இலட்சம் பேருக்கு நில உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
இதன்போது குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது “மக்களுக்கு காணி உரிமை அவசியமென்பதை தெளிவுப்படுத்த போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளோம்.
மேலும் மக்களுக்கு காணிகளை சொந்தமாக வழங்கும் சட்டமூல வரைவை தயாரித்து அமைச்சரவை அனுமதியை பெற இரண்டு வருடங்கள் சென்றன.
அதனைத் தொடர்ந்து குறித்த சட்டமூலத்திற்கு அனுமதி பெற்று, வர்த்தமானியில் வெளியிட்டு பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்களுக்கு காணிகளை சொந்தமாக வழங்குவதற்கு எதிராக இரண்டு அமைப்புகள் செயற்பட்டுள்ளன. இவர்கள் யார், ஏன் இவ்வாறு செயற்படுகின்றார்கள். அதேபோன்று எதிரணியிலுள்ள சிலரும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
மேலும் மக்களுக்கு காணி உரிமைகளை வழங்குவதை நிறுத்த வழக்கு தொடர போகிறார்களாம். எனினும் நாம் முன்னெடுத்துள்ள இந்த செயற்பாட்டை ஒருபோதும் கைவிடப்போவதில்லை.
இதற்கு முன்னர் பல்வேறு அரசியல் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. அவைகளை தடுத்து நிறுத்தினோம். அதேபோன்று இவ்விடயத்திலும் செயற்படுவோம்” என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.