சில தினங்களுக்கு முன்பு சென்னையில் சுபஸ்ரீ என்கிற இளம்பெண் ஒருவர் பேனர் சரிந்து விழுந்து, அதனால் பின்னால் வந்த லாரியில் அடிபட்டு விபத்தில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சி தலைவர்களும் சில முன்னணி நடிகர்களும் தங்கள் தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் தங்களுக்காக பேனர் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர்.
பேனர் விழுந்து இளம் பெண் மரணம் அடைந்த சோக நிகழ்வு கேரளாவையும் உலுக்கியுள்ளது. தற்போது மம்முட்டி நடித்து வரும் கானகந்தர்வன் என்கிற படத்தை இயக்கி வரும் இயக்குனர் ரமேஷ் பிஷரோடி என்பவர், இந்த நிகழ்வால் ரொம்பவே அப்செட் ஆகியுள்ளார். இதைதொடர்ந்து மம்முட்டியை வைத்து தான் இயக்கி வரும் படத்திற்கு எந்த ஒரு பேனரோ, கட் அவுட்டோ வைப்பதில்லை என்று அறிவித்துள்ளார் வழக்கம்போல வெறும் சாதாரண போஸ்டர்களை மட்டுமே விளம்பரத்திற்காக பயன்படுத்தப்போவதாக அவர் கூறியுள்ளார்.