1997ல் வெளிவந்த ‘அரவிந்தன்’ படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் ரத்னவேலு. பின்னர் பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘சேது, பிதாமகன்’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ததன் மூலம் முன்னணி ஒளிப்பதிவாளர் ஆக உயர்ந்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 25க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தென்னிந்தியத் திரையுலகத்தில் உள்ள முக்கிய ஒளிப்பதிவாளர்களில் அவரும் ஒருவர். அவரது ஒளிப்பதிவில் அடுத்து ‘சைரா’ படம் வெளிவர உள்ளது. தெலுங்கில் ‘சரிலேறு நீக்கெவரு’, தமிழில் ‘இந்தியன் 2’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
அடுத்த ஆண்டில் படத்தை இயக்கப் போவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதற்கான கதையை எழுதி முடித்துவிட்டாராம். கடந்த ஏழெட்டு வருடங்களாகவே படம் இயக்கும் முயற்சியில் இருந்ததாகக் கூறுகிறார். பெரிய படங்கள் சிலவற்றிற்கு அடுத்தடுத்து ஒளிப்பதிவு செய்ததால், தான் இயக்குனராவது தள்ளிப் போய்விட்டதாம்.