பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை அதிகரிப்பது தொடர்பில், இதுவரையிலும் எவ்விதமான தீர்மானமும் எட்டப்படவில்லை என, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
‘விலைகளை அதிகரிப்பது தொடர்பில், இந்திய எரிபொருள் நிறுவனம் (ஐ.ஓ.சி) நிறுவனம், எவ்விதமான கோரிக்கையையும் முன்வைக்கவில்லை’ என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்ஹ தெரிவித்தார்.
‘ஐ.ஓ.சி நிறுவனத்துக்கு சமாந்தரமாக, இலங்கை பெற்றோலியவள கூட்டுத்தாபனமும் நட்டத்தில் இயங்குகின்றது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘இலங்கை பெற்றோலியவள கூட்டுத்தாபனமும் தற்போதைய நிலையில்m ஒரு லீற்றர் பெற்றோலில் 16 ரூபாய் நட்டமும், ஒரு லீற்றர் டீசலில் 06 ரூபாய் நட்டமும் அடைகின்றது’ என்றும் உபாலி மாரசிங்ஹ தெரிவித்தார்.
‘இதனால், இலங்கை பெற்றோலியவள கூட்டுத்தாபனம், கடுமையான நிதி நெருக்கடிக்குமுகம்கொடுத்துகொண்டிருக்கின்றது. இலங்கை மின்சார சபை மற்றும் தனியார் மின்உற்பத்தி நிலையங்கள் பெற்றுக்கொண்ட, எரிபொருட்களுக்கான பணத்தை, செலுத்தாமையால், இவ்வாறான நிதி நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளதாகவும்’ அவர் மேலும் குறிப்பிட்டார்.
‘கடந்த சில வருடங்களில், சர்வதேச சந்தையில், மசகு எண்ணெய் பெரலின் விலை, பல்வேறு தருணங்களில், ஏற்ற இறக்கத்திலேயே இருந்தது’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
‘சர்வதேச சந்தையில், மசகு எண்ணெய் பெரலின் விலை 2015 ஜனவரி மாதத்தில் 50.23 அமெரிக்க டொலராக இருந்தது என்பதுடன் 2016 ஆம் ஆண்டு ஜனவரியில் அதன் விலை 29.49 அமெரிக்க டொலராக இருந்தது’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
‘2016 டிசெம்பர மாதத்தில், உலக சந்தையில் மசகு எண்ணெய் பெரலின் விலை, 54.63 அமெரிக்க டொலராக இருந்தது. 2017 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் அது 51.49 டொலர் வரையிலும் குறைந்திருந்தது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.