நல்லூர் ஆலய உற்சவத்தின்போது யாழ்ப்பாணம் மாநகர சபையால் ஒதுக்கப்படும் கடைத் தொகுதிகளில் 5 கடைகள் பெண்கள் அமைப்புக்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு யாழ்ப்பாண மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெண் உறுப்பினரால் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.
நல்லூர் ஆலயத் திருவிழாவின்போது யாழ்ப்பாணம் மாநகர சபையினரால் வழங்கப்படும் கடைத் தொகுதிகளில் பெண்கள் அமைப்புக்களுக்கு ஒரு கடை வழங்கப்படுவது வழமை. இம்முறையும் அவ்வாறு வழங்க வேண்டும் என்று அவர் கோரினார்.ஒரு கடையை மட்டும் ஒதுக்கி ஒரு அமைப்புக்குக் கொடுத்தால் பின்னர் அதனால் சிக்கல் நிலைமைகள் தோன்றலாம் என்று ஏனைய உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். 5 கடைகளையாவது ஒதுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த ஆண்டு திருவிழாவின்போது 307 கடைகள் அமைக்கப்படவுள்ளன. பெண்கள் அமைப்புக்களுக்கு 5 கடைகள் வழங்கப்படும். அதற்கு எந்தக் கேள்வி கோரலும் இடம்பெறாது. அவர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
ஆனால் திருவிழாவின் ஆரம்பித்திலேயே அந்தக் கடைகளை பெண்கள் அமைப்புக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் எடுக்காதவிடத்து குலுக்கல் முறையில் அவை வேறு நபர்களுக்குக் கட்டணத்துக்கு வழங்கப்படும் என்று சபை முதல்வர் இ.ஆனோல்ட் தெரிவித்தார்.