மாவனல்லையிலும், அதனை அண்மித்த பிரதேசங்களிலும் புத்தர் சிலைகளுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை மஜிஸ்ட்ரேட் உபுல் ராஜகருனா உத்தரவிட்டுள்ளார்.
இது சம்பந்தமான வழக்கு நேற்று (13) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் 17 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெண் ஒருவரும் இருப்பதாக கூறப்படுகின்றது.
பிரதான சந்தேக நபர்களுக்கு அடைக்களம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் இல. 84/1, நாவலப்பிட்டிய வீதி, உலப்பனை பிரதேசத்தில் வசிக்கும் இருவர் நேற்று முன்தினம் (12) கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் காணப்படுவதாக கூறப்படுகின்றது. மாவனல்லை பொலிஸ் விசாரணைப் பிரிவின் பொலிஸ் அதிகாரி ஆர்.எம்.ஏ. ரணசிங்கவின் தலைமையில் சென்ற குழுவினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களும் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக சகோதார தேசிய ஊடகமொன்று அறிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக, கேகாலை சிறைச்சாலையிலுள்ள 11 சந்தேகநபர்கள் கடுமையான பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன், இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகநபர்கள் நான்கு பேர், கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்கள் நான்கு பேரும் வனாத்தவில்லு பிரதேசத்திலிருந்து கைது செய்யப்பட்டவர்கள். மாவனல்லை புத்தர் சிலை சேதப்படுத்தியவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியதாக கடந்த 30 ஆம் திகதி இவர்கள் கைது செய்யப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வழக்கு தொடர்பில் சந்தேக நபர்களுக்காக எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராகவில்லையென்பது குறிப்பிடத்தக்க அம்சம் என அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.