புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழர்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது என்று ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச் சந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில் –
கடந்த சில நாட்களில் நாட்டின் அரசியலில் ஏற்பட்ட மாற்றத்திற்கு கூட்டமைப்பு தனது முழுப் பங்களிப்பினை வழங்கியதன் மூலம் மீண்டும் ரணில் தலைமையிலான ஆட்சியைக் கொண்டு வந்தது.
எனவே இந்தக் காலப்பகுதியில் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்களைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இந்தக் காலப்பகுதியில் தேவையான அழுத்தங்களைப் பிரயோகித்து எமக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் வேறு எந்தக் காலப்பகுதியிலும் பெற்றுக் கொள்ளமுடியாது.
எதிர்வரும் ஆண்டு தேர்தல் ஆண்டாக அமையவுள்ளதால், ரணில் உள்ளிட்ட தென்னிலங்கையின் அரசியல்வாதிகள் தமது வாக்கு வங்கியினைக் கருத்தில் கொண்டு தமிழர்களின் தீர்வு விடயத்தில் சாதகமான முடிவுகளை எடுக்கமாட்டார்கள். ஏனெனில் இவ்விடயம் தென்னிலங்கையில் மஹிந்த அணியினர் உள்ளிட்ட எதிர்த்தரப்பினருக்கு எதிர்ப்பிரசாரத்தினை மேற்கொள்வதற்கு வழிசமைக்கும்” என்றார்.