நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தொடர்ந்தும் வகிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு அரசு தன்னால் முடிந்த சகல நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா விடுத்திருக்கும் அறிக்கையயான்றில் கூறியிருப்பதாவது –
“அண்மைய அரசியல் நெருக்கடியின் பின்புலத்தில் நோக்கும்போது நாடாளுமன்றத்தைக் கலைத்ததில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே அரசமைப்பை மீறிச் செயற்பட்டிருப்பதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த அதேவேளை, இரா.சம்பந்தனின் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் நெருக்கடியில் சம்பந்தப்பட்ட எந்தவொரு தரப்புடனும் பேரம் பேசாமல் அரசமைப்பின் பிரகாரம் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்வதற்குக் கோட்பாட்டின் அடிப்படையில் அணுகுமுறைகளைக் கடைப்பிடித்தது.
ஆனால், அரசியல் நெருக்கடியின் முடிவில் கூட்டமைப்பு அரசியல் ரீதியில் சிக்கலான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. அதாவது, அரசியல் நெருக்கடியின்போது தாங்கள் கடைப்பிடித்த அணுகுமுறைகளினால் தமிழ் மக்கள் பெற்றிருக்கக் கூடிய பயன் என்று எதையும் தங்கள் வாக்காளர்களுக்குக் காண்பிக்க இயலாதவர்களாகக் கூட்டமைப்பின் தலைவர்கள் இருக்கிறார்கள்.
அவ்வாறு பயன்எதையும் காட்ட முடியாமல் போகுமேயானால் தீவிர தமிழ்த் தேசியவாதக் கட்சிகளின் பிரசாரங்களின் விளைவாக கூட்டமைப்பின் அரசியல் பலம் அருகிப்போய் விடக்கூடிய சாத்தியம் இருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்புக்கு நாட்டுக்குள்ளும் வெளியேயும் ஓர் உத்தியோகபூர்வ மதிப்பு அந்தஸ்தை வழங்கியது. கூட்டமைப்பின் தலைவர் நாட்டின் உயர்மட்டத் தலைவர்களின் வரிசையில் ஒருவராகவும் விளங்கக்கூடியதாக இருந்தது.
இது கூட்டமைப்புக்கோ அல்லது அதற்கு வாக்களித்த தமிழ்ச் சமூகத்துக்கோ வெறுமனே ஓர் அடையாள பூர்வமான கெளரவம் அல்ல. எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்புக்கு முக்கியமாக இருந்ததற்கு மிகுந்த நடைமுறைக் காரணங்களும் உள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பிலான சர்ச்சையில் கூட்டமைப்பு நீதிமன்றத்தை நாடுவதற்கான நடவடிக்கைகளுக்குத் தயாராவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. சுய நலன்களின் அடிப்படையில் செயற்படுகின்ற அரசியல் தலைமைத்துவங்களைப் போலன்றி , நீதிமன்றங்கள் தர்க்கநியாயத்துடன் பிரச்சினைகளை அணுகக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளன என்பதுஇப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் முன்னிலையில் கூட்டமைப்பினால் இரு முக்கிய வாதங்களை முன்வைக்க முடியும். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் ஜனாதிபதி சிறிசேன அரசின் அங்கமாக இருக்கிறார். அதனால் அவரின் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சித் தலைவராவது தர்க்க நியாயத்துக்குப் பொருந்தாது. ஜனாதிபதி மூன்று அமைச்சுப் பொறுப்புக்களையும் தன்வசம் வைத்திருக்கிறார்.
இரண்டாவதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஓர் அங்கமாக இல்லாத ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்க் கட்சித் தலைவராக பதவி வகிக்க முடியாது. இத்தகையதொரு சூழ் நிலையிலே, எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்கு கூட்டமைப்பு முன்னெடுக்கக் கூடிய முயற்சிகளை ஆதரிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது” என்றுள்ளது.