பிரதி சபாநாயகர் பதவிக்கு, நாளை நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அரசமைப்பின் 64 (3) உறுப்புரைக்கமையவே, புதிய பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெறும்.
பிரதமர் ரணில் விக்கரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, பிரதி சபாநாயகர் திலங்க சுமத்திபால உள்ளிட்ட, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேர் ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து, அந்த 16 பேரும் நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகி, எதிரணியில் அமர்ந்துகொண்டனர். அத்துடன், திலங்க சுமத்திபால எம்.பி, தன்னுடைய பிரதி சபாநாயகர் பதவியையும் இராஜினாமாச் செய்துவிட்டார்.
இந்நிலையில், எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர், ஆரம்பித்துவைக்கப்பட்டது. எனினும், வெற்றிடமாகவுள்ள பிரதி சபாநாயகர் பதவிக்கு இதுவரையிலும் எவரும் நியமிக்கப்படவில்லை. எனினும், அப்பதவிக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பெயரை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிரேரித்துள்ளது. அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சி சுதர்சி்னி பெர்னான்டோ புள்ளேயை இந்தப் பதவிக்கு முன்மொழியவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறியின் பெயரை, ஐக்கிய தேசியக் கட்சி பிரேரித்துள்ளது.
இதேவேளை, இந்தப் பதவிக்காக, எதிர்க் கட்சிகள் சார்பில் ஒருவரை நியமிப்பதற்கு, கூட்டு எதிரணியினர் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது. இந்நிலையிலேயே, இரகசிய வாக்கெடுப்பின் மூலம் ஒருவரை தெரிவு செய்யப்படவுள்ளார்.
இந்நிலையில், ஜே.வி.பியின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக, ஐ.தே.க, சு.க மற்றும் கூட்டு எதிரணி ஆகியன, தனித்தனியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.