ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற விறுவிறுப்பும் பரபரப்பும் மிக்க ஆட்டங்களைத் தொடர்ந்து 2026 FIFA உலகக் கிண்ணம், சுமார் 1672 கோடி ரூபா பணப்பரிசு, தங்கப் பதக்கங்கள், சம்பியன்ஷிப் மோதிரங்கள் ஆகியவற்றை வென்றெடுக்கும் குறிக்கோளுடன் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, முன்னாள் சம்பியன் ஸ்பெய்ன் ஆகிய அணிகள் சரித்திரம் வாய்ந்த உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

இந்த இறுதிப் போட்டி நியூ ஜேர்சி விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பின் 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
உலகக் கிண்ண வரலாற்றில் இரண்டு கண்டங்களின் கால்பந்தாட்ட சம்பியன்கள் இறுதிப் போட்டியில் விளையாடுவது இதுவே முதல் தடவையாகும்.
கோப்பா அமெரிக்கா சம்பியனாக ஆர்ஜன்டீனாவும் ஐரோப்பிய சம்பியனாக ஸ்பெய்னும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.
1978, 1986, 2022 ஆகிய வருடங்களில் உலக சம்பியனான ஆர்ஜன்டீனா நான்காவது உலக சம்பியன் படத்திற்கு குறிவைத்து விளையாடவுள்ளது.
மேலும் 1958, 1962களில் சம்பியனான பிரேஸிலுக்குப் பின்னர் தொடர்ச்சியாக இரண்டு முறை சம்பியன் பட்டம் வெல்லும் முதலாவது அணி என்ற வரலாற்றுச் சாதனை ஏடுகளில் தனது பெயரைப் பதிவு செய்ய ஆர்ஜன்டீனா முயற்சிக்கவுள்ளது.










