“கடந்த 2015-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான நெறிமுறைகளுக்கு சர்வதேச நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
போலந்தில் இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்த ஐ.நா. பருவ நிலை மாநாட்டில், பருவ நிலை மாற்றத்தின் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ள நாடுகளுக்கும், வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் இடையே கருத்தொற்றுமை ஏற்படாததால் இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்து வந்தது.
எனினும், கடுமையான விவாதங்களுக்குப் பிறகு, பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தம் ரத்தாகிவிடாமல் பாதுகாக்கும் வகையில் இந்த உடன்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த மாநாட்டின் தலைவர் மைக்கேல் கர்டிகா கூறியதாவது:
பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தின் செயல்திட்டங்களை ஒருங்கமைப்பது மிகவும் பொறுப்பு வாய்ந்த பணியாகும். எதிர்பார்த்தைவிட இது மிகக் கடினமாக இருந்தது.
எங்களால் இயன்றவரை, யாருக்கும் பின்னடைவை ஏற்படுத்தாத வகையில் அந்த ஒப்பந்தத்துக்கான செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளோம் என்றார் அவர்.
புகை மாசு வெளியேற்றத்தை குறிப்பிட்ட அளவு குறைத்து, அதன் மூலம் புவி வெப்பமாதலையும், பருவ நிலை மாற்றத்தையும் கட்டுப்படுத்துவதற்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தை சர்வதேச நாடுகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த 2015-ஆம் ஆண்டு மேற்கொண்டன.
அந்த ஒப்பந்தத்துக்கு இறுதி வடிவம் கொடுப்பதற்கான பேச்சுவார்த்தை, போலந்தின் கடோவைஸ் நகரில் கடந்த 2-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற்றது. எனினும், வளர்ச்சியடைந்த நாடுகள் மற்றும் பருவ நிலை மாற்றத்தின் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள நாடுகள் இடையே நீடித்த மாறுபட்ட கருத்துகளால் இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்ததையடுத்து, பேச்சுவார்த்தை மேலும் ஒரு நாளுக்கு நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது ஒப்பந்தத்தின் செயல்திட்டத்துக்கு சர்வதேச நாடுகள் ஒப்பதல் அளித்துள்ளன.
ஏன் இந்த மாற்றம்?
பூமி உறைந்து விடாமல் இருப்பதற்கு அதன் வளி மண்டலம்தான் காரணம்.
வளி மண்டலத்தில் கலந்துள்ள நீராவியும், கரியமில வாயு, மீத்தேன், ஓஸோன் போன்ற வாயுக்களும், சூரிய ஒளிக் கதிரிலிருந்து அகச்சிவப்புக் கதிர்களை உள்வாங்கி வெளியிடுவதாலேயே, பூமியின் வெப்பம் உயிர்கள் வாழ்வதற்குத் தேவையான அளவில் இருந்து வருகிறது.
அந்த வாயுக்கள் இல்லாவிட்டால், பூமியின் மேற்பரப்பு பனிக்கட்டிகளாக உறைந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சூழலில், மனிதர்களின் தொழிற்புரட்சிக்குப் பிறகு, பூமியை வெப்பமாக வைத்திருக்கும் கரியமில வாயு உள்ளிட்டவை வளிமண்டலத்தில் அதிக அளவில் கலக்கத் தொடங்கின.
அவை, அதிக அளவில் சூரியனிடமிருந்து வெப்பத்தை கிரகித்துத் தருவதால் பூமியின் வெப்பமும் அதிகமாகி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கடந்த 1880-லிருந்து 2012-ஆம் ஆண்டு வரை பூமியின் சராசரி வெப்ப நிலையில் 0.85 டிகிரி செல்ஷியஸ் அதிகரித்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக, அன்டார்டிகா கண்டத்தின் பனிக்கட்டிகள் உருகி, கடலின் நீர்மட்டம் அதிகரித்து பல தீவுகளும், கடற்கரைப் பகுதிகளும் கொஞ்சம் கொஞ்சமாக கடல் கொள்ளும் அபாயத்தில் உள்ளன. மேலும், வெப்ப அதிகரிப்பால் வளிமண்டல சுழற்சியில் மாற்றங்கள் ஏற்பட்டு புயல், வெள்ளம், வறட்சி போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
பருவ நிலை மாற்றம் என்று அழைக்கப்படும் இந்த பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதற்காக, கரியமில வாயு உள்ளிட்ட வெப்பத்தை
அதிகரிக்கச் செய்யும் வாயுக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறுவதைக் கட்டுப்படுத்துவதற்காக
உலக நாடுகள் 2015-ஆம் ஆண்டில் மேற்கொண்ட ஒப்பந்தம்தான் பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தம்.

