பாடசாலை என்பது பிள்ளைகளுக்கு அறிவை மாத்திரம் வழங்கும் இடமல்ல, அது அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய மிகவும் பாதுகாப்பான, அன்பு நிறைந்த இடமாக அமைய வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.
குருணாகல், சாமோதய வித்தியாலயத்தின் நவீன வசதிகளுடன் கூடிய மூன்று மாடி வகுப்பறைக் கட்டடம் மற்றும் கேட்போர் கூடம் ஆகியவற்றை மாணவர்களின் பயன்பாட்டிற்காகக் கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர்,
நாம் இந்த வித்தியாலய வளாகத்திற்கு வந்த தருணத்திலிருந்தே மாணவர்களின் திறமைகளை எம்மால் காணக்கூடியதாக இருந்தது. எதிர்காலத்தில் நமது நாட்டு மக்கள் அனைவரும் இந்த மாணவர்களின் திறமைகளைக் காணும் பாக்கியத்தைப் பெறுவார்கள். பிள்ளைகளுக்கு மிகச் சிறந்தவற்றை வழங்கவேண்டும் என்பதே அரசாங்கத்தின் கல்விக் கொள்கையாகும்.
கட்டடங்களை மாத்திரம் பெற்றுக்கொடுப்பதால் கல்வி பூர்த்தியடைவதில்லை. அதன் உள்ளடக்கமும் மிகச் சிறந்ததாக இருக்கவேண்டும். ஒரு பிள்ளை தனது வீட்டுக்கு வெளியே அதிக நேரத்தைச் செலவிடுவது பாடசாலையில் என்பதால், அந்தச் சூழலில் அன்பு நிறைந்திருப்பது கட்டாயத் தேவையாகும் என்றார்.
07 மாத காலத்துக்குள் 41 மில்லியன் ரூபா செலவில் இந்த நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்து மாணவர்களின் பயன்பாட்டுக்குக் கையளித்தமை குறித்துத் தனது பாராட்டைத் தெரிவித்த பிரதமர், நிகழ்வின் ஞாபகார்த்தமாகப் பாடசாலை வளாகத்தில் சிறுநாகப்பூ மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தமை குறிப்பிடத்தக்கது.
















