மினுவாங்கொடை – கொழும்பு ( 265 ஆம் இலக்க வழிப்பாதை ) தனியார் பஸ் வண்டிகளில் பணி புரியும் எட்டு பஸ் ஓட்டுநர் மற்றும் பஸ் நடாத்துனர்களை, கொழும்பு டாம் வீதி பொலிஸார் நேற்று முன் தினம் புறக்கோட்டை, குணசிங்கபுர தனியார் பஸ் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
குறித்த பாதையில் தனியார் பஸ்களில் சேவையில் ஈடுபடும் பஸ் ஓட்டுநர் மற்றும் நடாத்துனர்களில் பெரும்பாலானோர், போதைப் பொருள் பாவனையில் ஈடுபடுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே இவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சில பஸ் ஓட்டுநர்களும் நடாத்துனர்களும் குறித்த பஸ் நிலையத்தில் பஸ் வண்டிக்குள்ளேயே போதைப் பொருள் பாவிப்பதாகவும், மேலும் சிலர் முன்கூட்டியே பொலிஸாரின் சுற்றிவளைப்பை அறிந்துகொண்டு பயணிகளை புறக்கோட்டையில் இறக்கிவிட்டு போதைப் பொருள் பாவிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ் ஓட்டுநர் போதைப் பொருள் பாவிக்கும்போது நடாத்துனர் பஸ்ஸை செலுத்துவதாகவும், நடாத்துனர் போதைப் பொருள் பாவிக்கும்போது ஓட்டுநர் பஸ்ஸை செலுத்துவதாகவும் தமக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும், கொழும்பு டாம் வீதி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லலித் சிலோகம தெரிவித்தார். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை, டாம் வீதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.