பரிசில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறுநீர் கழிக்கும் நவீன இயந்திரம், தொடர் சர்ச்சைக்குள்ளாகி வந்த நிலையில் தற்போது உடைக்கப்பட்டுள்ளது.
Uritrottoirs என அழைக்கப்படும் இந்த ஆண்களுக்கான சிறுநீர் கழிக்கும் இயந்திரம், எவ்வித மறைப்புகளும் இன்றி பொது வெளியில் வைக்கப்பட்டுள்ளது பரிசில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. ஆண்கள் சிறுநீர்கழிப்பதை வீதி செல்பவர்களோ மற்றவர்களோ பார்க்கமுடியும், இது நாகரீகமான செயலாக இருக்க முடியாது என பலர் கருத்து தெரிவித்துள்ள அதேவேளை, இது ஆண்களுக்கானது மட்டுமே, அப்படியென்றால் பெண்கள் எங்கே சிறுநீர் கழிப்பது என கேள்வி எழுப்பியுள்ளனர். இது ஒருபக்கம் இருக்க, இந்த புதிய Uritrottoirs சிலரால் உடைக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை இரவு பரிஸ் நான்காம் வட்டாரத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்த Uritrottoirs, சிலரால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வருட கோடைகால ஆரம்பத்தில் இருந்து இவை அமைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. இதனால் தொடர்ந்தும் இதை நிறுவும் பணிகளை பரிஸ் நகர மண்டபம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.