விஜய்சந்தர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி உள்ள ‘சங்கத்தமிழன்’ படம் நாளை(நவ., 15) வெளியாக உள்ளது. ஆனால், இன்னமும் ஆன்லைன் முன்பதிவு ஓரிரு தியேட்டர்களைத் தவிர மற்ற இடங்களில் ஆரம்பமாகவில்லை.
நாளை வெளியாக உள்ள ஒரு படத்திற்கு முன்தினத்தில் கூட இப்படி முன்பதிவு ஆரம்பமாகவில்லை என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். இந்தப் படத்தைத் தயாரித்துள்ள விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இதற்கு முன்பு தயாரித்து வெளியிட்ட அஜித் நடித்த ‘வீரம்’ படத்தின் வியாபாரத்தில் சில சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கிறதாம். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். அவை ஒரு முடிவுக்கு வந்தால் தான் ‘சங்கத்தமிழன்’ நாளை வெளியாவது உறுதி செய்யப்படும் என்கிறார்கள்.
இதற்கிடையே திருநெல்வேலி மாவட்டத்தில் இப்படம் வெளியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ‛சங்கத்தமிழன்’ படத்தை வாங்கி உள்ள லிப்ரா புரொடக்ஷன், விக்னேஷ் பிக்சர்ஸிடம் ரூ.15 லட்சம் கடனாக பெற்றதை திருப்பி தரவில்லை. இதுதொடர்பாக நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் விக்னேஷ் பிக்சர்ஸ் விக்னேஸ்வரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று(நவ., 14) விசாரணைக்கு வந்தபோது நெல்லை மாவட்டத்தில் மட்டும் இப்படத்தை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பழைய பஞ்சாயத்துக்களை முடிப்பதற்கு முன்பே பட வெளியீட்டுத் தேதிகளை இனி தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என திரையுலகத்திலேயே குரல் எழுந்துள்ளது.
ரசிகர்களும் எதிர்பார்த்த படம் வராமல் போனால் பிறகு அதன் மீது ஆர்வம் காட்டமாட்டார்கள். குறிப்பாக முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களில் ஏதாவது பிரச்சினை இருந்தால் அதை சீக்கிரமே பேசித் தீர்க்க வேண்டும். வெளியீட்டுத் தேதி வரை இழுத்துக் கொண்டு வரக் கூடாது என புலம்புகிறார்கள்.
விஜய் சேதுபதி நடித்து இதற்கு முன் வெளிவந்த ‘சிந்துபாத்’ படத்திற்கும் இப்படித்தான் வெளியீட்டுச் சிக்கல் வந்தது.