நூறுநாள் வேலைத்திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் அல்ல, பொது வேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த சகலரும் இணைந்து தயாரித்த கொள்கைத்திட்டமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளரும், ஊடகப் பிரிவின் பிரதானியுமான அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
‘மைத்திரி நிர்வாகமும், நூறு நாட்களில் புதிய நாடும்’ என்ற வாசகத்துடனேயே நூறுநாள் வேலைத்திட்டம் குறித்த பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்த அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களுடன் இணைந்தே நூறுநாள் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டது என்றும் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய ஊடகப் பிரிவு ‘சத்ய’ (உண்மை) என்ற பெயரில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளராகவும், ஊடகப் பிரிவின் பிரதானியாகவும் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ அண்மையில் நியமிக்கப்பட்டார். இவருடைய தலைமையில் தற்பொழுது புதிய ஊடகப் பிரிவு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் பற்றி உண்மையான செய்திகள் மக்களுக்கு வழங்கப்படுவதில்லை. எனவேதான், உண்மையான செய்திகளை வழங்குவதற்கு ‘சத்ய’ ஊடக வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனூடாக உண்மையான செய்திகளை ஊடகங்களுக்கு வழங்கவுள்ளோம்.
இந்த உண்மைச் செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஊடகங்களுக்கு இருப்பதுடன், உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டிய பொறுப்பு மக்களுக்கு இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியினால் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த எடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளை சரியாகவும், தெளிவாகவும், விபரமாகவும், விரைவாகவும் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வது மற்றும் அது தொடர்பில் சமூகத்துக்கு உரிய தெளிவுபடுத்தல்களை வழங்குவது இந்தப் பிரிவின் முக்கிய நோக்கமாகும் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
கட்சி என்ற வகையிலும், அரசாங்கம் என்ற வகையிலும் முன்னெடுக்கும் செயற்பாடுகளை வெளிப்படைத்தன்மையுடன் தேடிப்பார்ப்பதற்கான உரிமையை ஊடகங்களுக்கு வழங்கி, அதன்மூலம் பொதுவான ஊடக குழு என்ற வகையில் கட்சியின் அங்கீகாரத்துடன் ஊடகங்களுக்கு செய்திகள் பகிரப்படும் என்றும் அவர் கூறினார்.
100 நாள் வேலைத்திட்டத்தில் உள்ள பெரும்பாலான விடயங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சில விடயங்கள் இன்னமும் நிறைவேற்றப்படவேண்டியுள்ளது.
எஞ்சியிருக்கும் ஒன்றரை வருட காலத்துக்குள் சகலவற்றையும் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசினால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு வேலைத்திட்டங்கள் ஊடகங்களினால் சரியான முறையில் வெளிக்கொணரப்படவில்லை.
உதாரணமாக பாடசாலை மாணவர்களுக்கு ஆரம்பிக்கப்பட்ட சுரக்ஷா காப்புறுதித்திட்டத்தைக் கூறலாம். ஜனாதிபதி மற்றும் பிரதமரின் முகங்களுடன் கூடிய பாடசாலைப் பைகள் மற்றும் பனர்களை வைத்து நாம் இத்திட்டத்தை பிரபலப்படுத்தவில்லை.
இதுபோன்ற பல திட்டங்கள் மக்களுக்கு சரியான முறையில் கொண்டு சேர்க்கப்படவில்லை. எனவேதான் உண்மையை மக்களுக்கு கொண்டு சேர்க்க இந்த ஊடகப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.