இந்தோனேசியாவின் பாலித் தீவில் வாழும் இந்து சமூகத்தினரின் நாட்காட்டியின் பிரகாரம் நாளை சனிக்கிழமை புதுவருடம் பிறக்கின்ற நிலையில் அதனையொட்டி அந்நாட்டிலான கையடக்கத் தொலைபேசி மற்றும் கையில் எடுத்துச் செல்லக்கூடிய கணினி உபகரணங்களுக்கான இணையத்தள சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த நயிபி புதுவருட தினத்தையொட்டி அந்தத் தீவின் விமான நிலையமும் அந்நாட்டு நேரப்படி நாளை சனிக்கிழமை காலை 6.00 மணியிலிருந்து 24 மணி நேரத்துக்கு மூடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.நயிபி புதுவருட தினமானது மௌன தினத்தைக் குறிக்கின்ற நிலையில் அந்தப் பிராந்தியத்திலுள்ள பல இந்துக்கள் கையடக்கத் தொலைபேசிகளுக்கும் இணையத்தள பக்கங்களுக்கும் அடிமையாகி புதுவருட நிகழ்வின் தார்ப்பரியத்தை மீறும் நடவடிக்கையில் ஈடுபடலாம் என்பதாலேயே அந்த சேவைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிராந்திய இந்து சபையின் தலைவர் குஸ்ரி நகுராஹ் நுடியனா தெரிவித்தார்.
ஆனால் ஹோட்டல்கள், பொதுச்சேவைகள், விமானசேவைகள், வங்கிகள் மற்றும் பாதுகாப்பு சேவைகள் என்பவற்றிலான வைபை சேவைகள் வழமை போன்று செயற்படும் என இந்தோனேசிய தொலை த்தொடர்பாடல் அமைச்சின் பாலிக்கான தலைமை அதிகாரி நயோமன் சுஜனா கூறினார்.