குற்றங்கள் தண்டிக்கப்படாமல் விடப்பட்டதன் ஆபத்துக்களை இலங்கையில் இடம்பெறும் சம்பவங்கள் தெளிவாக காட்டுகின்றது என தெரிவித்துள்ள பன்னாட்டு சட்டவாளர் றிச்சாட் ஜே றோஜெர்ஸ்,இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரம் தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
‘இலங்கையில் உள்ள நிலைமை குற்றங்கள் தண்டிக்கப்படாமல் விடப்படுவதன் ஆபத்துகளைத் தெளிவாகக் காட்டுகிறது. அதாவது பெருமளவிலான குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
‘மனித உரிமைப் பேரவை இலங்கையின் நிலைமையைப் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பும் படி, ஐநா பாதுகாப்பு சபை எடுத்துரைக்க வேண்டும். இது இலங்கையில் பாதிப்புற்ற மக்களுக்கும் பொறுப்புக்கூறல் கோரும் மனித உரிமைக் காவலர்களுக்கும் ஆதரவு தெரிவிப்பதாக அமையும்.’ எனத் தெரிவித்துள்ளார்.
றிச்சாட் ஜே றோஜெர்ஸ். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டு சுயாதீனமாக இயங்கி வரும், இலங்கையின் நிலைமாறுகால நீதிச்செயற்பாடுகளை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும், போர் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்களை விசாரணை செய்யும் கம்போடிய கலப்பு நீதிமன்றத்தின் சட்டவாளருமாகவும் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.