இங்கிலாந்து நாடாளுமன்றத்தை முடக்க தீர்மானித்த பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு சட்டவிரோதமானது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் நாளை அந்த நாட்டின் நாடாளுமன்றம் கூடுகிறது.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற இங்கிலாந்து முடிவு செய்தது. இதற்கான வாக்கெடுப்பில் மக்கள் வெளியேற ஆதரவு தெரிவித்தனர். ஆனால், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற முடியாமல் சிக்கலை சந்தித்து வருகிறது.
வரும் அக்டோபர் 31-ம் தேதி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவது உறுதி என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்கிடையே, அக்டோபர் மாதம் 14-ம் தேதி வரை இங்கிலாந்து நாடாளுமன்றத்தை முடக்கி வைக்க வேண்டும் என ராணி எலிசபெத்துக்கு அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று ராணி எலிசபெத், பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்கி வைக்க ஒப்புதல் அளித்துள்ளார்.
இதனை எதிர்த்து லண்டன் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியானது. இதையடுத்து, பிரெக்சிட்டுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கினா மில்லர் என்பவர் இங்கிலாந்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி பிரிண்டா ஹாலே தலைமையிலான 11 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணைக்கு ஏற்றது. அப்போது, நாடாளுமன்றத்தை முடக்குமாறு ராணிக்கு பரிந்துரை செய்யும் பிரதமரின் முடிவு சட்ட விரோதமானது என தலைமை நீதிபதி பிரிண்டா ஹலே தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். மேலும் 11 நீதிபதிகளும், ஒருமனதாக தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.
பிரதமரின் முடிவு செல்லாது என்றும், இனி என்ன செய்ய வேண்டும் என்பதை பொதுச்சபை மற்றும் பிரபுக்கள் சபையின் சபாநாயகர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் பொதுச்சபை நாளை காலை11 மணிக்கு கூடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சபாநாயகர் ஜான் பெர்கோவ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.