அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் பேதங்களின்றி நாட்டைப் பற்றிய உணர்வுடன் நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றுபட வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
கந்தளாய் மொரவெவ ஸ்ரீ இந்ராராம விகாரையில் நேற்று புதிதாக நிர்மணிக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை திறந்து வைக்கும் புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
உன்னத வாரலாற்றைக் கொண்டுள்ள எமது நாடு அன்று விவசாயத்துறையில் வளம்பெற்று விளங்கியது. எதிர்காலத்திலும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு விவசாயத்துறையை அடிப்படையாகக்கொள்ள வேண்டுமென்றும் காலநிலை மாற்றங்கள் சவாலாக இருந்தபோதும் புதிய திட்டங்களின்மூலம் அந்த சவால்களை வெற்றிகொள்ள வேண்டும் என கூறினார்.
இதன்பின்னர் மொரவெவ இந்ராராம விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், முதலில் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை திறந்து வைப்பதற்கான நினைவுப் பலகையை திரை நீக்கம் செய்த ஜனாதிபதி, புத்தர் சிலைக்கு முதலாவது மலரஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கூட்டத்தின்போது அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்குதல், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான உதவிகளை வழங்குதல், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பரிசில்கள் உள்ளிட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
சேருவில மங்கள ரஜமகா விகாராதிபதி சங்கைக்குரிய முன்ஹேனே மெத்தாராம நாயக்க தேரர், சங்கைக்குரிய களுத்தர சோமரத்தன நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.