ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான உள்ளூர் விசாரணைகளுக்கு, அமெரிக்காவின் சமஸ்டி விசாரணைப் பிரிவு (FBI) தடங்கலாக இருக்கிறது என வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானவையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
படுகொலைகள் தொடர்பான மாதிரிகளை (FBI) பெற்றுள்ளதால், பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் இது உள்ளூர் விசாரணையாளர்கள் தமது கடமைகளை செய்வதற்கு தடையாக உள்ளதென்றும் நேற்று முன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர, “பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களின் மாதிரிகள் மற்றும் குண்டுதாரிகளின் இரத்த மாதிரிகள் ஆகியவற்றை, நீதிமன்ற அனுமதியுடன் தான் (FBI) பெற்றிருந்தது.
விசாரணைகளுக்கு தாங்கள் உதவி வழங்குவதாகவும் தேவைப்பட்டால் தாங்கள், விசாரணைக்கு முன்னிலையாகத் தயாராக இருப்பதாகவும் (FBI) நீதிமன்றத்தில் கூறியிருந்தது.
மாதிரிகளைப் பெற்றுக்கொள்வதற்கு குற்ற விசாரணைத் திணைக்களத்தின் அனுமதியையும் (FBI) கோரியிருந்தது. அத்துடன், குற்ற விசாரணைத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கும் அந்த அமைப்பு உதவி வருகிறது” என்றும் அவர் கூறினார்.