ஊழல் அதிகரித்து காணப்படுகின்றமையினாலேயே நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ரஞ்சித் ஆண்டகை மேலும் கூறியுள்ளதாவது, “சிறு முதலாளிகள் முதல் உயர் இடங்களில் உள்ளவர்கள் வரை ஊழல் பாதையிலேயே பயணிக்கின்றனர்.
இதற்கு எதிராக செயற்படாவிடின் இலங்கையை முன்னேற்றப் பாதையின் கீழ் கொண்டு செல்ல முடியாது. நாம் எவ்வளவு கூறினாலும், மீண்டும் மீண்டும் செய்யக்கூடாத விடயங்களையே செய்கின்றனர்.
முதுகெலும்பு இல்லை என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன். மேலும், மத வாழ்க்கையை முதுகெலும்பாக வாழ்வதன் முக்கியத்துவத்தை நம் மக்கள் மறந்து விட்டார்கள். நாம் சமுதாயத்தை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு சிந்தனை புரட்சி தேவை.
இதேவேளை ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் போது, இறந்த உடல்களுடன் கத்தோலிக்க தேவாலயங்களை முதன்முதலில் பார்வையிட்டபோது அதிர்ச்சியடைந்தேன்.
எனது மதக் கடமைகளை முறையாக நிறைவேற்றாதமையினால் தான், இந்த நிலைமை ஏற்பட்டது என தன்னைத் தானே குற்றம் சாட்டிக்கொண்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.













