பயங்கரவாத பிடியில் இருந்து முஸ்லிம்களைப் பாதுகாத்து பள்ளிவாசல்களிலும் வீடுகளிலும் முடங்கி இருந்தவர்களை வெளியில் கொண்டு வந்தவர்கள் நாங்களே என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டம் ஒன்று சாய்ந்தமருது பௌசி விளையாட்டு மைதானத்தில் நேற்று (25) இடம்பெற்றது . இதில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
முஸ்லீம்களுக்கான தொழுகையைக் கூட முடக்கியது இந்த ஆட்சியில் தான். ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஒரு தேவாலயத்தில் குண்டுவெடிக்க போகின்றது என்று தெரிந்தும் கூட ஒரு அமைச்சர் தன் மகனை தேவாலயத்திற்கு செல்ல வேண்டாம் என்று கட்டளையிட்டார். தானும் செல்லவில்லை. ஆனால் தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்தார்கள். இந்த அரசாங்கம் தான் இத்தாக்குதலுக்கு பொறுப்பு சொல்ல வேண்டும்.
எங்கள் ஆட்சியில் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பேருவளை தாக்குதலின் போது ஜனாதிபதியான நானும் பாதுகாப்பு செயலாளரும் அன்றைய தினம் நாட்டில் இல்லாமல் இருந்தோம். இருந்த போதிலும் சம்பவம் அறிந்து உடனே நாடு திரும்பி இரவோடு இரவாக உணவு உண்ணாமல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தோம்.
ஆகவே தான் எங்களுக்கு எதிர் வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் உங்களுடைய பரிபூரண ஆதரவை தாருங்கள் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.