‘புரூஸ் லீ ‘, ‘மாமன்’ ஆகிய திரைப்படங்களையும், ‘லக்கி’, ‘விலங்கு: ஆகிய இணைய தொடர்களையும் இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் – ‘வாரண்ட்’ எனும் இணைய தொடர் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வாரண்ட்’ எனும் இணைய தொடரில் பிரசாந்த் பாண்டியராஜ் ,பாலாஜி சக்திவேல் , கௌசல்யா, காளி வெங்கட் , நம்ரிதா , அருள் ஜோதி, அருள் தாஸ், சாயா தேவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அசோக் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த இணைய தொடருக்கு சாம் சி எஸ் பின்னணி இசையமைத்திருக்கிறார்.
குற்ற புலனாய்வு விசாரணை பின்னணியில் தயாராகியுள்ள இந்த இணைய தொடரை ஜீ 5 டிஜிட்டல் தளத்திற்காக சிவன் பிக்சர்ஸ் மற்றும் எஸ் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் ‘வாரண்ட்’ எனும் இணைய தொடரின் அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.
”காவல் நிலையம் ஒன்றில் பணியாற்றும் கோட்டை கருப்புசாமி எனும் காவலரின் தொழிற்சார்ந்த வாழ்வியலை மையப்படுத்தி இந்த இணைய தொடர் உருவாகி இருக்கிறது.
இந்த கதாபாத்திரம் உறவு சார்ந்த உளவியல் அழுத்தங்களை எதிர்கொண்டாலும் சட்டத்தை அதன் வலிமையான விதிமுறையை எப்படி அமல்படுத்துகிறார் என்பதை பரபரப்பான காட்சிகள் மூலம் திரைக்கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அதிகாரம் -ஆட்சி -நீதி- ஆகியவற்றை குறித்து முக்கியமான கேள்விகளையும் இந்த இணைய தொடர் எழுப்புகிறது” என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

