நாட்டு மக்களை ஏமாற்றி ஆட்சி செய்து வரும் தற்போதைய ஆட்சியாளர்களே மிகவும் மோசமானவர்களென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொரளையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “பேருவளையில், முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் எமது காலத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்த சம்பத்தின்போது, நான் நாட்டில் இருக்கவில்லை. அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவும் நாட்டில் இல்லை.
ஆனால், அந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் இன்று அமைச்சுப் பதவிகளை வகித்து வருகிறார்கள். இவ்வாறானவர்கள்தான் உண்மையில் பயங்கரமானவர்கள்.
இவர்களின் உண்மையான முகங்கள் இன்று, வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. நாம், என்றும் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக செயற்பட்டது கிடையாது.
அவர்களுக்கான முழுமையான பாதுகாப்பினை வழங்க நாம் என்றும் தயாராகவே இருக்கிறோம். இதற்கான பொறுப்பையும் நாம் எடுக்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.