சிறுபான்மையின மக்கள் மத்தியில் காணப்படும் தனது செயற்பாடுகள் குறித்த அச்ச நிலைப்பாடு, வெகுவிரைவில் மாற்றமடையுமென ஸ்ரீலங்கா பொதுஜனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொரளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய மேலும் கூறியுள்ளதாவது, “கொழும்பு, ஸ்லேவ் ஹைலேன்ட் பகுதியில் அழகான தொடர்மாடிக் குடியிருப்பு தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதன் நிர்மாணிப்புப் பணிகளின்போது, குறித்த பகுதியில் இருந்து தமிழர்களையும் முஸ்லிம்களையும் அப்புறப்படுத்தி, சிங்களவர்களை குடியேற்ற முற்படுவதாக எம்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
நாம் அதனை வேறு யாருக்கும் வழங்கவில்லை. வெளிநபர்களுக்காக அந்த வீடுகளை அமைக்கவில்லை.
ஆனால், எமது செயற்பாடுகள் தொடர்பாக பொய்யான பிரசாரமே மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதனை அந்த மக்களும் நம்பினார்கள்.
முஸ்லிம் மக்கள் மத்தியில், என்னை மிகவும் மோசமான ஒரு நபராகவே சித்தரித்துள்ளார்கள். உண்மையில், எனது குடும்பத்திலேயே மிகவும் அப்பாவி நான் தான். எனது அண்ணன் மஹிந்த ராஜபக்ஷவிடமே இதனை கேட்டுக்கொள்ள முடியும்.
இப்படியான நான் எவ்வாறு, மிகவும் மோசமான நபராக சமூகத்தில் சித்தரிக்கப்பட்டேன் என்ற கேள்வி என்னிடம் இன்றும் இருந்துக் கொண்டே தான் இருக்கிறது.
அண்மையில், ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரியொருவர் என்னை சந்திக்க வருகைத் தந்திருந்தார்.
அரை மணித்தியாலங்களே தேவை என கூறி கதைக்க வந்தவர், இரண்டரை நேரங்களைக் கடந்தும் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். இறுதியில் அவர் செல்லும் போது, என்னிடம் ஒரு விடயத்தைக் கூறினார்.
அதாவது, எனது செயற்பாடுகள் தொடர்பாக சர்வதேசத்திற்கு மிகவும் பயங்கரமான தோற்றப்பாடே காண்பிக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால், இங்கு வந்து பார்த்த பிறகு தான் உண்மைகள் தனக்குத் தெரிய வந்ததாகவும் அவர் என்னிடம் கூறினார்.
மேலும், இதனால்தான் அரை மணித்தியால சந்திப்பு, இரண்டரை மணித்தியாலங்களுக்கும் மேல் நீடித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இவரின் இந்த நிலைப்பாட்டை, இம்முறை மக்களும் உணர்ந்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை என்னிடமுள்ளது.
சிங்களவர்கள் போன்றே தமிழர்களும், முஸ்லிம்களும் இன்று பாதுகாப்பு தொடர்பாக அச்சத்திலேயே உள்ளார்கள். நிச்சயமாக நாம் இந்தப் பிரச்சினைக்கு விடைக்கொடுப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.