ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீதான ஏவுகணைத் தாக்குதல்கள் தற்காப்புக்காக நடத்தப்பட்டவையே என ஈரான் அறிவித்துள்ளது.
ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஜவாத் ஜரீஃப் ஈரான் அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் கூறியுள்ளதாக சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீதான ஏவுகணைத் தாக்குதல்கள் நியாயமான முறையான தற்காப்புக்காக நடத்தப்பட்டவையாகும் எனவும், அமெரிக்கா இந்த தாக்குதலை வைத்து தப்புக் கணக்குப் போடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.
நாங்கள் போரை விரும்பவில்லை ஆனால் அமெரிக்கா பதிலடி கொடுத்தால் நாங்கள் எங்களை தற்காத்துக் கொள்வதற்காக தாக்குவோம் என கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக இன்று அதிகாலை ஈரான் நாட்டு படைகள் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ படைத்தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.