சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த தர்பார் படம் கடந்த 9ந் தேதி வெளிவந்தது. நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படம் இணைய தளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகி உள்ளது. அதோடு படத்தை மூன்று பாகமாக பிரித்து வாட்ஸ்அப்பிலும் வெளியிட்டுள்ளனர்.
அதனை வெளியிட்ட ஒருவர் “நல்ல ஆடியோ தரத்துடன் படத்தை 3 பாகமாக வாட்ஸ்அப்பில் வெளியிட்டுள்ளேன். எல்லோரும் பாருங்க. ஒருத்தன் கூட தியேட்டருக்கு போக கூடாது. இந்த படம் ஓடவே கூடாது அடிச்சு காலி பண்ணுங்க” என்ற ஆடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார்.
இதனால படத்தயாரிப்பு நிறுவனமான லைக்கா அதிர்ச்சி அடைந்துள்ளது. நேற்று லைக்கா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பி.கண்ணன், மற்றும் தயாரிப்பாளர் சங்க ஆலோசனை குழு உறுப்பினர்களான டி.சிவா, கே.ராஜன் ஆகியோரும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் கொடுத்தனர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:
தர்பார் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த படத்தை வாட்ஸ் அப்பில் ஒருவர் வெளியிட்டு, தர்பார் படம் பார்க்க யாரும் தியேட்டருக்கு செல்ல வேண்டாம். இந்த படம் வசூலே ஆக கூடாது. அடிச்சு காலி பண்ணுங்க என்ற குரல் பதிவையும் பதிவு செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருக்கிறோம்.
இந்த குரல் பதிவை வெளியிட்டவரை அடையாளம் காட்டுபவருக்கு லைகா நிறுவனம் தக்க சன்மானம் வழங்கும். தியேட்டரில் இருந்து படத்தை பதிவு செய்திருக்கிறார்கள். க்யூப் சோதனையில் எந்த தியேட்டர் என்பது தெரிந்து விடும். அதன்பேரில் அந்த தியேட்டர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.