தென்றலே என்னைத் தொடு, விடிஞ்சா கல்யாணம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஜெய ஸ்ரீ. இவர், இருபது ஆண்டுகளுக்கு முன்பாகவே சினிமாவில் நடிப்பதை விட்டு விட்டு, திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவுக்குச் சென்று, அங்கேயே செட்டில் ஆகி விட்டார்.
அங்கு எம்.எஸ்., படிப்பை முடித்தவர், ஐ.டி., நிறுவனம் ஒன்றில் ப்ராஜெக்ட் மேலாளராக பணியாற்றி வருகிறார். இப்படி கார்ப்பரே நிறுவனங்களில் மேல் மட்ட அளவில் பணியில் இருப்பவர்கள், அங்கிருக்கும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தன்னார்வலர்களாக சென்று, பணியாற்றுவது போன்ற ஒரு ஏற்பாட்டை செய்து வைத்திருக்கின்றனர்.
அப்படி, அடிக்கடி ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தன்னுடைய மூத்த மகன் அர்ஜுனுடன் செல்லும் நடிகை ஜெய ஸ்ரீ, அங்கு, சமையல் செய்து ஆதரவற்றோருக்கு பரிமாறும் பணியை செய்து வருகிறார்.
இது குறித்து, ஜெய ஸ்ரீ கூறீயிருப்பதாவது:
வாழ்க்கையில் எந்த உயரமான நிலையை எட்டினாலும், இருப்பவர் – இல்லாதவர் என்ற பாகுபாடு சமூகத்தில் இருக்கக் கூடாது. முக்கியமாக, மனித எண்ணங்களில் அது குடி புகுந்து விடக் கூடாது. அதனால் தான், அமெரிக்காவின் உயர்ந்த நிலையில் இருப்பவர்களும், ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று, அங்கிருக்கும் ஆதரவற்றோருக்கு ஆதரவாக இருந்து பணி விடை செய்கின்றனர். ஆதரவற்றோர் இல்லங்களுக்கு செல்லும் நானும் என்னுடைய மூத்த மகன் அர்ஜுனும், அங்கிருக்கும் ஆதரவற்றோருக்கு சமையல் செய்து சாப்பாடு பரிமாறுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறோம். இதனால், மனது நிம்மதி அடைகிறது. இந்த சமூகத்தில் யாரும் உயர்ந்தவரும் இல்லை; தாழ்ந்தவரும் இல்லை. எல்லோரும் சமமானவர்கள் தான் என்ற எண்ணம், ஆழப் பதிந்து விட்டது. இப்படி செய்யும்போது, ஆதரவற்றோர் நன்றியோடு நம்மை பார்க்கும்போது, அந்த பார்வைக்கு ஈடு இணையில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.