வினோத் இயக்கத்தில், அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படம், நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்தை பைரசி இணையதளங்களில் வெளியிட நீதிமன்றம் தடை விதித்தது. எந்தத் தடையும் தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல படத்தை தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டுவிட்டது.
கடந்த சில வருடங்களாக தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பைரசி இணையதளங்களில் புதிய படங்கள் வெளியாவதைத் தடுக்க தயாரிப்பாளர் சங்கம் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், அனைத்துமே தோல்வியில்தான் முடிந்தது.
மாநில மற்றும் மத்திய அரசிடம் திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு கோரிக்கை வைத்தும் பைரசிக்கு எதிராக கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால், பல தயாரிப்பாளர்கள் பெருத்த நஷ்டத்திற்கு ஆளாகிறார்கள். தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம், உணவுப் பொருட்கள் கட்டணம் அதிகமாக இருப்பதால் மக்களும் பைரசி இணையதளங்களிலேயே படங்களைப் பார்த்துவிடுகின்றனர்.
இதற்கு எப்போது நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்பது தயாரிப்பாளர்களுக்கு கானல் நீராகவே உள்ளது.