தமிழ் அரசியல் சக்திகள் ஒருங்கிணைந்து ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும் என தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
நெருக்கடி சூழ்ந்த நிலையில் தமிழ் சமூகம் நிதானமாகவும் எச்சரிக்கையாகவும் தொலைநோக்குப் பார்வையோடும் முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டத்தில் இருப்பதாக தொல். திருமாவளவன் சுட்டிக்காட்டினார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருந்தாலும், புதிதாக கட்சி தொடங்கியுள்ள விக்னேஷ்வரனாக இருந்தாலும் எல்லோரும் ஒருங்கிணைந்து தமிழர்களின் நலன்களை கருதிற்கொண்டு தாயகத்தை மீட்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் தமிழர்களின் தாயகத்தை அதே அடையாளத்துடன் மீட்கக்கூடிய வகையில் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என்பது விடுதலைச் சிறுத்தையின் வேண்டுகோள் எனவும் தொல். திருமாவளவன் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வட மாகாண மர நடுகை ஆரம்ப விழாவில் கலந்துகொண்ட போதே அவர் இவ்விடயங்களைக் கூறினார்.
தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் – கனகரத்னம் மத்திய மகாவித்தியாலயத்தில் மர நடுகை விழா ஆரம்பமானது
இந்த நிகழ்வில் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.