முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் ஆறாம் நாளான இன்று (17) மன்னாரில் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் ஈழப்போரின் வலி சுமந்த நாட்களின் நினைவு நிகழ்வும் அனுஷ்டிக்கப்பட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் பிரதான பேருந்து நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் காலை 10.30 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு அங்கிருந்தவர்கள் உட்பட வீதியில் சென்றவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் கலந்துகொண்டோர்
இந்தநிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன், மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், தமிழரசு கட்சியின் நகரசபை உறுப்பினர்கள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வை நினைவுபடுத்தும் விதமாக வருடாந்தம் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் ஈழத்தமிழர்களால் அனுஷ்டிக்கப்படுவதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளை அலுவலகம் முன்பாக இன்று (17) இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது தமிழினப் படுகொலையை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
நிகழ்வில் கலந்துகொண்டோர்
இந்த நிகழ்வில் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், செயலாளர் எம்.எ.சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், து.ரவிகரன், ஞா.சிறிநேசன், க.கோடீஸ்வரன், இ.சிறிநாத், இரா.சாணக்கியன், ப. சத்தியலிங்கம், பிரதேச சபைகளின் தவிசாளர்களான பா.பாலேந்திரன், தி.கிருஸ்ணவேணி உட்பட கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள்,தொண்டர்கள் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது வீதியால் பயணித்த பொதுமக்களும் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சியை வாங்கி அருந்திச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
