பல ஆண்டுகளுக்கு முன்பு கமல் நடித்த படம் நீயா. இது பாம்பை மையமாக கொண்ட படம். அதே பாணியில் தற்போது தயாராகி வரும் படம் நீயா 2, பழைய நீயாவுக்கும் இந்தப் படத்தின் கதைக்கும் சம்பந்தமில்லை. பாம்பு படம் என்பதுதான் ஒற்றுமை. இதில் ஜெய், ராய் லட்சுமி, கேத்ரின் தெரசா, வரலட்சுமி, பால சரவணன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஷபிர் இசை அமைக்கிறார், ராஜவேல் மோகன் ஒளிப்பதிவு செய்கிறார். பாலுமகேந்திராவின் உதவியாளர் எல்.சுரேஷ் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே எத்தன் என்ற படத்தை இயக்கியவர். படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் படம் பற்றி இயக்குனர் கூறியதாவது:
பாலுமகேந்திராவிடம் நானும் வெற்றிமாறனும் உதவியாளராக இருந்தோம். எனது முதல் படம் தெலுங்கு. அதன் தமிழ் பதிப்பு தான் எத்தன். ஒரு இயக்குநருக்கு படம் என்பது எந்தளவு முக்கியம் என்று அவர்களுக்கு மட்டுமே தெரியும். அதேபோல் என் முயற்சியின் மேல் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. பாம்புக்கு படம் பண்ணனும் என்று கூறினார். பாம்புக்கு எப்படி படம் பண்ணுவது என்று யோசிக்கும்போது தொலைக்காட்சியில் நாகினி தொடரைப் பார்த்தேன். சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தது. பிறகு தான் இந்த கதை தோன்றியது.
நீயா படத்தில் நிஜ பாம்பை தான் காட்டியிருப்பார்கள். அதேபோல் இப்படத்திலும் ராஜநாகத்தை வைத்து இயக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்காக பாம்பைப் பற்றி தெரிந்துகொள்ள பாங்காக்கிற்கு சென்றோம். அங்கு ராஜநாகத்தை வீட்டில் வைத்து வளர்த்து வருகிறார்கள். படத்தில் கிராபிக்ஸ் இல்லாமல் நிஜ பாம்பை தான் காட்டியிருக்கிறோம்.
வரலக்ஷ்மிக்கு கடினமான கதாபாத்திரம் கொடுத்திருக்கிறோம். அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார். எத்தன் முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக இருந்தது. இப்படம் ரொமான்டிக் திரில்லராக இருக்கும். என்றார்.

