தனுஷின் ஆடுகளம் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை டாப்சி. தமிழில் சில படங்களில் நடித்தவர், பிறகு தெலுங்கு, ஹிந்தி என பிஸியானார். சமீபகாலமாக ஹிந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார் டாப்சி. ‘மாயா’, இறவாக்காலம் படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கும் இப்படத்திற்கு, கேம் ஓவர் என பெயரிடப்பட்டுள்ளது. இதுவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையாகத் தான் உருவாகிறது.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. அக்., 11(நாளை) முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.