ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு: சசிகலாவின் மாஸ்டர் பிளான்?
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானாதைத் தொடர்ந்து, அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாதான் நியமிக்கப்படுவார் என்ற தகவல்கள் வெளியுள்ளன.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 5 ஆம் திகதி உடல்நலக் குறைவால், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
அப்போதே, கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் பொதுச்செயலாளர் பதவி, கட்சியில் அங்கீகாரம் போன்றவற்றை மையப்படுத்தி வெத்து காகிதங்களில் கையெழுத்து வாங்கியதாக கூறப்பட்டு வந்தது.
சுமார் 28 ஆண்டுகளாக, அஇஅதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.
இவர் எந்தவித போட்டியோ, சிக்கலோ இல்லாமல், ஒரு மனதாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
ஜெயலலிதாவைப் போன்று சசிகலாவும் போட்டியின்றி தேர்வாவதையே விரும்புவதாக கூறப்படுகிறது. அதற்கேற்றாற் போல், காய்களை நகர்த்தி வருகிறார்களாம் மன்னார்குடி குடும்பத்தினர்.
தமிழகத்தில் ஆட்சி அதிகாரம் எவ்வித குறுக்கீடும் இல்லாமல், மத்திய அரசின் விருப்படியும் இருக்க வேண்டும் என சசிகலா நினைக்கிறாராம். மேலும் முதல்வரின் பதவிகள் பங்கீடு குறித்து பேச்சு வந்த போது,
ஆளுநர் வித்யாசாகர் ராவின் விருப்பமாக இருந்தவர் பன்னீர் செல்வம். முதல்வர் இருந்து இருந்தாலும், அவரின் சாய்ஸும் ஓபிஎஸ்ஸாகத்தான் இருக்கும் என்பதால், அந்த முடிவில் தீர்மானமாக இருந்தாராம் சசிகலா. அதனையொட்டித்தான் மத்திய அரசின் விருப்பப் பட்டியலில் இருந்த ஓ பன்னீர் செல்வத்துக்கு மீண்டும் தமிழக முதல்வர் பதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை மற்ற மன்னார்குடி குடும்பத்தினர் ரசிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
அதே போல் மத்திய அரசிடம் இணக்க போக்கை கடைப்பிடிக்கவே பறக்கும் சாலை திட்டம், சரக்கு மற்றும் சேவை வரி போன்றவற்றிற்கு பரஸ்பர ஒத்துழைப்பை நல்கி இருக்கிறார்கள்.
ஆனால் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் பறக்கும் சாலை திட்டத்திற்கு அனுமதி வழங்காமல் இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே.
சொத்துக்குவிப்பு வழக்கும், அதன் இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதால், மத்திய அரசிடம் சுமூகமான அணுகுமுறையே தொடர வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார் சசிகலா.
இதைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையாக, கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள், சசிகலாவை முன்மொழிய தொடங்கி இருக்கிறார்கள். மக்களிடம் இருக்கும் சில அதிருப்தியை போக்க, நேற்று அமைச்சர்களுடன், ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று வந்தார் சசிகலா.
ஜெயலலிதா மறைவை தாங்க முடியாமல் அதிமுக தொண்டர்கள் சமாதியிலும், அவரது போயஸ் கார்டன் இல்லத்திலும் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இன்று காலை, போயஸ் கார்டன் வந்தவர்களை சந்தித்து நேரில் ஆறுதல் கூறினார் சசிகலா.
இதற்கு அடுத்து திடீரென்று அதிமுக மூத்த நிர்வாகிகள் மதுசூதனன், செங்கோட்டையன், வளர்மதி, கோகுல இந்திரா, சி.ஆர்.சரஸ்வதி, சைதை துரைசாமி, ராஜன் செல்லப்பா, டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் இன்று போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்தனர்.
அவர்கள் அனைவரும் கட்சியின் பொதுச் செயலாளாராக சசிகலா இருக்க வேண்டும் என கூறினர். இதனால் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதிக்குள், அதிமுக பொது செயலாளராக சசிகலா போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.