ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு அமர்வில் இலங்கை சார்பில் இரண்டு குழுக்கள் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களை முன்வைப்பதிலும் பார்க்க வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான ஒரு குழு பிரதிநிதித்துவம் செய்வதே சிறப்பானதாக அமையுமென ஜனாதிபதி நம்புவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எம்.பி. மஹிந்த சமரசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் இலங்கைத் தரப்பில் ஒரு குழுவை பிரதிநிதித்துவம் செய்வதற்கு ஜனாதிபதி இறுதித் தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம மற்றும் வடமாகாண ஆளுநர்ஆகியோர் ஜெனீவா செல்வரென்றும் அவர் குறிப்பிட்டார்.
அதுதொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற விசேட கூட்டத்தின்போதே இத்தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குழுத் தலைவராக செயற்படும் அமைச்சர் திலக் மாரப்பன எதிர்வரும் 21 ஆம் திகதி ஜெனீவாவில், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கருத்துக்கள் அடங்கிய கூட்டறிக்கையை இலங்கை சார்பில் முன்வைப்பாரென்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.