ஜனாதிபதி செயலகத்தின் பிரதானிகளான பேராசியர் ஐ.எச்.கே. மஹானாம மற்றும் அரச மர கூட்டுத்தாபனத்தின் தலைவர் பி. திசாநாயக்க ஆகியோர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து, 2 கோடிரூபா இலஞ்சம் பெற்றுக்கொள்ளும்போது குறித்த இருவரும் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிறுவனமொன்று தொடர்பிலான பண பரிமாற்றம் தொடர்பில் ரூபா 10 கோடி பணத்தை இலஞ்சமாக கோரி, அதில் ரூபா 2 கோடி பணத்தை முற்பணமாக பெறுவதற்கு முயற்சி செய்கையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேராசிரியர் ஐ.எச்.கே. மஹானாம, காணி அமைச்சின் முன்னாள் செயலாளர் என்பதோடு, அண்மையில் ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி எனும் முக்கிய பதவியில் நியமிக்கப்பட்டிருந்தார் எனக் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, குறித்த இருவரினதும் சேவையை உடனடியாக இடைநிறுத்துமாறு கட்டளையிட்டுள்ள ஜனாதிபதி, குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு எதிராக எந்தவித அழுத்தங்களுமின்றி சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறும் உரிய அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.